……… இறுதியாக, மானுடம் என்பதை வரையறைசெய்வதில், அலெக்சாண்டிரியப் பள்ளியின் பேராசான்கள் மீது மார்க்ஸ் தலையீடுசெய்து, உருவாக்கிய, ’கருவிகள் படைத்து, பொருள் உற்பத்திசெய்து அதன்வழி வாழ்வை நடத்தும் உயிரினம்’ என்கிற ’வரைவு’, இன்றுவரை பேரளவில் மாறுதல் இல்லாமல் ஏற்கப்படுவதாகத் தொடர்கிறது.
கருவிகள் உருவாக்கத்திற்கும் மூலப்பொருள்களின் துணை இன்றியமையாதது. கொச்சைப் பொருளைத் (கச்சாப்பொருள் அல்ல) திரட்டவும், படைத்த கருவிகளின் துணையோடு, பல்லாயிரம் புத்தாக்கக் குடிமைப் பயனீட்டுப் பொருள்களை உருவாக்கவுமான சூழல் ஏற்பட்டது.
உணவு, உடை, உறைவிடம் இன்னும் பல உளநிலைத் தேவைகள், உருவம்பெற்று மானுடத்தின் புழங்குபொருள்களாக நிலைபெற்றன. அதற்கான சான்றுகளை, பல மொழி இன, தொல் இலக்கியங்களில், பயன்பாட்டு வரலாறுகளில் காணமுடியும். புழங்குபொருள்கள்தாம் இயற்கையின் மீப்பேராற்றலை மானுடத்திற்கு வசப்படுத்திக்கொடுத்த பொருண்மிய அடிநிலை அலகுகள் எனலாம். அவை, மானுடத்தின் ஆற்றல், மானுடத் தேவையை நூறு விழுக்காடு தீர்த்துவைக்கும் திறன்மிக்கவை என்கிற இறைமை ( sovereignity) உணர்வை உறுதிசெய்தது எனலாம்.
இயற்கையின் படிவமாக விளங்குகிற கொச்சைப்பொருள்கள், மனிதக் கைகளின் முதன்மைப் பங்கேற்பால் மாற்றமடைந்து, புலன்வழி துய்க்கும்நிலைக்கு நகரும்போது ‘புழங்குபொருள்’களாக உருவம்கொள்கின்றன. இந்தப் புழங்குபொருள்களின் அளவுமாற்றமே, மானுட வாழ்வில் பண்புமாற்றமாக வெளிப்பட்டு, கோட்பாட்டு அறிவியலில் (பரிணாமவியல்) படிமலர்ச்சியின் ஒரு கட்டமாக, விளக்கப்பெறுகின்றன.
மனித உடற்கூறியல் சார்ந்த தேவைகளாகட்டும், உளநிலைத் தேவைகளாகட்டும், அவை பண்பாட்டு வலைப்பின்னலில் பொருள்வகை உருவம்பெற்று, ஒரு சமூகவயமான அடையாளத்தைத் தனிமனிதனுக்கு வழங்கத்தொடங்குவதும் இந்தப் புழங்குபொருள் புலத்தில்தான்!
மானுடத்தின் தமிழ்க்கூறை விளங்கிக்கொள்வதிலும் விளக்கியுரைப்பதிலும் வெறும் கருத்துவகை ஆக்கங்களே வரலாறெழுதியலை (Historiography) ஆட்சிசெய்துவிடுகின்றன. அகம், புறம், அறம், பக்தி, மீட்டெடுப்பு என இலக்கிய ஆக்கங்களுக்கு உள்ளுறைச் சுவடுகளாக, பொருண்மியநிலையில் இருப்பவை, புழங்குபொருள்களே! கற்கோடாரிகள் தொடங்கி, கொழுமுனை(இரும்பு), ஏர்க்கலப்பை, சுட்ட பானைகள், செங்கற்கள், நெசவுத்தறிகள், ஊது உலைகள், துளையிட்ட மணிகள், நடுகற்கள், முதுமக்கள்தாழிகள் என பன்னூறு புழங்குபொருள்கள், தொல்தமிழர் வாழ்வை, தூர் போல் அப்பிக்கொண்டிருந்ததை, தொல் அகலாய்வுத் துறைகள் துலக்கப்படுத்திக்காட்டுவதை நாள்தோறும் எதிர்கொள்கிறோம்.
வரலாற்றின் அருவநிலை கருத்துருவங்கள் எல்லாமும் பொருள்நிலை உருவத்தில் தக்க சான்றுகளின்வழி மெய்ப்பிக்கப்படவேண்டியது, இன்றியமையாதது. அதுவே, வரலாற்றை தெய்வீகத்திடம் ( divinity) இருந்து பறித்து, பௌதீகத்திடம் (physical perspect) ஒப்படைப்பதற்கான ஒரே வழி.
கடந்த, நிகழ், எதிர் என்கிற முக்காலங்களில், புழங்குபொருள்களின் தாக்குரவு, மானுட வாழ்வில் எங்ஙனம் இருந்துவருகிறது என்பதை இப்பகுதியின் வழியாகக் காணலாம்.
பொருண்மிய(material) வடிவில் உறுதிசெய்யாத எந்தக் கருத்துநிலையும், கற்பிதமாகவும் படிப்படியாக பாசிசமாக உருத்திரண்டு, முற்றாதிக்கம் செலுத்தவும் வாய்ப்புண்டு என்பது வரலாறு நமக்கு வழங்குகிற படிப்பினையாகும்.
– கன்று